இலங்கை நெருக்கடி | சங்ககாரா டூ ஜெயவர்த்தனே; ரியாக்ட் செய்த கிரிக்கெட் வீரர்கள்

By எல்லுச்சாமி கார்த்திக்

கொழும்பு: தீவு தேசமான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. உணவு, எரிபொருள் மாதிரியானவற்றுக்கு அந்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் போராட்டம் அங்கு வெடித்துள்ளது. இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது. இருந்தாலும் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தங்களது பதவியிலிருந்து விலகாமல் உள்ளனர். இத்தகைய சூழலில் இலங்கை நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நாட்டில் நிலவும் சூழல் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். முன்னாள் கேப்டன்கள் குமார் சங்ககாரா, ஜெயவர்த்தனே மற்றும் தற்போதைய இலங்கை அணியில் விளையாடி வரும் பனுகா ராஜபக்சே, வனிந்து ஹசரங்கா ஆகியோர் இதில் அடங்குவர்.

இவர்கள் நான்கு பேரும் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் சீசனில் பயிற்சியாளர், வீரர் எனப் பல்வேறு படிநிலைகளையும் ஏற்று அதில் விறுவிறுப்பாகப் பங்கேற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குமார் சங்ககாரா

"மக்கள் இந்த சிக்கலுக்கு தீர்வு வேண்டி குரலை எழுப்பி உள்ளனர். சிலர் அந்த குரல்களை ஒடுக்க வெறுப்பிலும், கோபத்திலும் எதிர்வினை ஆற்றுகிறார்கள். சிலர் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அரசியலை தள்ளி வைத்துவிட்டு இப்போதைக்கு இலங்கையின் நலனுக்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்வது தான் சரியான நகர்வாக இருக்கும். கற்பனை கூட செய்து பார்க்க முடியாத கடினமான சூழலில் இலங்கை உள்ளது. மக்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும்" என சொல்லியுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனரான சங்ககாரா.

ஜெயவர்த்தனே

"இலங்கையில் ஊரடங்கு மற்றும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டு நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். தங்களது தேவைகளை வலியுறுத்தி தான் மக்கள் போராடி வருகின்றனர். போராடுவதற்கான உரிமை மக்களுக்கு உள்ளது. போராட்டத்தை ஒடுக்க முயல்வதை ஏற்றுக் முடியாது. தவறுகளுக்கு தலைவர்கள் தான் காரணம். மக்களை விரைந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவர்களது துன்பங்களை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மனிதனால் செய்யப்பட்ட இந்தத் தவறை மனிதனே சரி செய்ய முடியும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துபவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். நாட்டுக்கு நம்பிக்கை கொடுக்க இனி நமக்கு ஒரு புதிய அணி வேண்டும்" என தெரிவித்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்த்தனே.

பனுகா ராஜபக்சே

"நாட்டை விட்டு பல மைல் தூரம் கடந்திருந்தாலும் சக இலங்கை மக்களின் வலியையும், வேதனையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அநீதியை எதிர்த்து குரல் கொடுக்கும் அவர்களின் குரல் நசுக்கப்படுகிறது. 22 மில்லியன் மக்கள் ஒருமித்த குரலில் குரல் கொடுப்பதை யாராலும் புறக்கணிக்க முடியாது. அவர்கள் நம் நாட்டின் மக்கள். எதிரிகள் அல்ல. என்ன ஆனாலும் அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது பணி" என தெரிவித்துள்ளார் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் பனுகா ராஜபக்சே.

"உறுதியாக இருப்போம். ஒன்றாக இருப்போம்" என கேப்ஷன் கொடுத்து ஒரு கையில் மெழுவர்த்தியும், மறுகையில் குழந்தையும் தாங்கி நிற்கும் பெண்ணின் கார்ட்டூன் படத்தை பகிர்ந்துள்ளார் வனிந்து ஹசரங்கா.

இவர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்துள்ளனர். அதில் கமெண்ட் பாக்ஸில், உங்கள் கருத்துகளை ஏன் இவ்வளவு தாமதமாக தெரிவித்து உள்ளீர்கள்?, இலங்கைக்கு செல்லுங்கள்! என்பது மாதிரியான கமெண்டுகளை நெட்டிசன்கள் கொடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE