பிசிசிஐ விறுவிறுப்பு; வேகமாகத் தயாராகும் இரு மைதானங்கள்: மும்பையிலிருந்து போட்டிகளை மாற்றத் திட்டமா?

By ஏஎன்ஐ

மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலால் மும்பையில் ஐபிஎல் லீக் ஆட்டங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கு மாற்றாக இரு மைதானங்களைத் தயார் செய்யும் பணியில் பிசிசிஐ நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் மும்பையில் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அல்லது ஹைதராபாத் ஆகிய இரு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் லீக் ஆட்டங்களை நடத்த பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் மும்பை, புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் லீக் ஆட்டங்கள் ஏப்ரல் 10 முதல் 25-ம் தேதி வரை மும்பை வான்ஹடே மைதானத்தில் நடக்கிறது. சிஎஸ்கே அணி மோதும் ஆட்டங்கள்தான் பெரும்பாலும் நடைபெற உள்ளன.

இந்தூர் மைதானம்

ஆனால், கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மும்பை வான்ஹடே மைதானத்தைப் பராமரிக்கும் ஊழியர்களில் 14 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேலுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். அடுத்த 10 நாட்கள் வரை அக்ஸர் படேல் அணியின் பயோ-பபுள் சூழலுக்கு வர முடியாது என்பதால் சில லீக் ஆட்டங்களில் அக்ஸர் படேல் பங்கேற்க முடியாது எனத் தெரியவருகிறது.

டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் பயிற்சி எடுக்கும் மைதான அரங்கிலும் கரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால், மும்பையில் ஐபிஎல் லீக் ஆட்டங்கள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், அனைத்துத் தடைகளையும் மீறி மும்பையில் போட்டியை நடத்த முடியும் என்று பிசிசிஐ அமைப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது.

ஹைதராபாத் மைதானம்: கோப்புப் படம்.

பிசிசிஐ அதிகாரி ஒருவர் நிருபரிடம் கூறுகையில், "மும்பையில் கரோனா வைரஸ் பரவல் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மும்பையில் போட்டியை நடத்த முடியாவிட்டால், இரு இடங்களில் போட்டியை நடத்த ஆயத்தமாகி வருகிறோம். ஹைதராபாத், இந்தூர் மைதானங்களைத் தயார் செய்யக் கூறியுள்ளோம். மும்பையில் போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த இடங்களுக்கு மாற்றப்படும்" எனத் தெரிவித்தார்.

டெல்லி கேபிடல்ஸ், சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மும்பையில்தான் தற்போது முகாமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE