ஐபிஎல் தொடரில் நான் ஏலம் எடுக்கப்படாதது எதிர்பார்த்ததுதான்: ஆரோன் பின்ச் வெளிப்படை

2021ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் நான் ஏலம் எடுக்கப்படாதது நான் எதிர்பார்த்ததுதான் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.

14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலம் கடந்த 18-ம்தேதி சென்னையில் நடந்தது. கடந்த முறை ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியக் கேப்டன் ஆரோன் பின்ச் இந்த முறை ஏலத்தில் விடுவிக்கப்பட்டிருந்தார். ஆரோன் பின்ச்சுக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், ஏலத்தில் ஆரோன் பின்ச் பெயர் அறிவிக்கப்பட்டும் அவரை எந்த அணி நிர்வாகமும் ஏலம் எடுக்கவில்லை. கடந்த தொடரில் 12 இன்னிங்ஸ்களில் விளையாடிய ஆரோன் பின்ச், 268 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். ஆரோனின் மோசமான ஃபார்ம் காரணமாகவே அவரை ஆர்சிபி அணி நிர்வாகம் விடுவித்தது.

இந்நிலையில் நியூஸிலாந்துடன் டி20 தொடரில் விளையாடுவதற்காக அந்நாட்டுக்கு ஆஸ்திரேலிய அணி ஆரோன் பின்ச் தலைமையில் சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நாளை முதலாவது டி20 போட்டி நடைபெற உள்ளது.

இதற்கிடையே ஐபிஎல் ஏலத்தில்தான் விலைபோகாதது குறித்து ஆரோன் பின்ச் கிரிக்கெட்.காம் இதழுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் " 2021ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் நான் ஏலம் எடுக்கப்படாதது நான் எதிர்பார்த்த ஒன்றுதான்.

நான் மீண்டும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் வருவேன்.

மிகச்சிறந்த போட்டியான ஐபிஎல் தொடரில் நான் விளையாடமுடியாதது,நான் அதில் ஒருபகுதியாக இடம் பெறாதது எதிர்பார்த்ததுதான். இதை நேர்மையாகச் சொல்கிறேன்.

என்னுடைய பேட்டிங்கில் தொழில்நுட்ப ரீதியாக சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். கால்களை முன்னே நகர்த்தி ஆடுவதில் சிரமம் இருக்கிறது அதைச் சரி செய்து வருகிறேன். இது தொடர்பாக நான் ஆன்ட்ரூ டொனால்டுடன் கலந்து பேசி அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்றுள்ளேன். இயல்பான ஆட்டத்துக்கு வரமுடியாமல் தவிக்கும்போதெல்லாம் மெக்டானால்டிடம்தான் அறிவுரை கேட்பேன். அவரிடம் பயிற்சி பெறுவது என்பது அற்புதமான உணர்வு" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE