ஒடிசாவில் உள்ள புவனேஷ்வர் நகரில் 33-வது தேசிய சப் ஜூனியர் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுவர்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ரித்விக் சஞ்ஜீவி தங்கப் பதக்கம் வென்றார். இறுதி சுற்றில் ரித்விக் சஞ்ஜீவி 21-15, 21-14 என்ற நேர் செட்டில் ராஜஸ்தானின் பிரனே கட்டாவை வீழ்த்தினார்.
17 வயதுக்கு உட்பட்டோருக் கான சிறுவர்கள் பிரிவில் தேசிய அளவிலான தொடரில் தமிழகத்தைசேர்ந்த வீரர் சாம்பியன் பட்டம்வெல்வது இதுவே முதன்முறையாகும்.
மகளிருக்கான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பிரணவி, சாருமதி ஜோடி வெள்ளிப் பதக்கம் பெற்றது. இறுதி சுற்றில் பிரணவி, சாருமதி ஜோடி 21-14, 18-21, 18-21 என்ற செட் கணக்கில் ஹரியாணாவின் தேவிகா சிஹாக், ரிதி கவுர் ஜோடியிடம் தோல்வி கண்டது.
இதேபோன்று கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ஹரிஹரன் அம்சகருணன், பிரவீனா ஜோடி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. அதேவேளையில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுமிகள் இரட்டையர் பிரிவில்தமிழகத்தின் ஞானதா கார்த்திகேயன், சானியா சிக்கந்தர் ஜோடி இறுதி சுற்றில் 21-7, 21-15 என்ற நேர் செட்டில் கர்நாடகாவின் காயத்ரி ராணி, ஜெய்ஸ்வால் கர்னிகா ஸ்ரீ ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.