மீண்டும் மோதலா?:கோலி வெளியிட்ட புகைப்படத்தில் ரோஹித் சர்மா எங்கே?: கேள்வியால் துளைத்தெடுத்த ரசிகர்கள்

புதுடெல்லி,


மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக அமெரிக்காவுக்கு இந்திய அணி சென்றுள்ள நிலையில், அங்கு கேப்டன் கோலி வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் இடையை உரசல் இருப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த புகைப்படம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அமெரிக்காவின்  புளோரிடா மாநிலத்துக்குச் சென்றுள்ளது. நாளை முதலாவது டி-20 போட்டி நடைபெற உள்ளது. இந்த முறை இந்திய அணியில் மூத்த வீரர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஏராளமான புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழலில் கேப்டன் கோலி, சமூக ஊடங்களில் "ஸ்குவாட்" என்ற தலைப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ரவிந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, கலீல் அகமது, ஸ்ரேயாஸ் அய்யர், குருனல் பாண்டியா, புவனேஷ் குமார், கே.எல்.ராகுல் ஆகியோர் கோலியுடன் உள்ளனர். ஆனால், புகைப்படத்தில் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் இல்லை. 

ரோஹித் சர்மா இந்த புகைப்படத்தில் இடம் பெறாத நிலையில் ஸ்குவாட்(அணி) என்று தலைப்பிட்டு விராட் கோலி பதிவிட்ட புகைப்படம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே உரசல் இருப்பதாக வெளியான நிலையில், இந்த புகைப்படம் எரியும் தீயில் எண்ணெய் வார்த்ததுபோன்று இருக்கிறது.

ட்விட்டரில் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் ரோஹித் சர்மா எங்கே, ரோஹித் சர்மாவை ஏன் புகைப்படத்தில் காணோம் என்ற ரீதியில் பல்வேறு கேள்விகளை கோலிக்கு எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

முன்னதாக மே.இ.தீவுகள் தொடருக்குச் செல்லும் முன் ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராமில் ஒருபதிவிட்டிருந்தார்,  அதில் " நான் அணிக்காக மட்டும் செல்லவில்லை, நான் என் நாட்டுக்காகவும் செல்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார். 

உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியில் இந்திய அணி தோல்விக்குப்பின் கேப்டன் கோலிக்கும், துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் இடையே உரசல் இருப்பது குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகின. ஆனால், இதை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் மறுத்தனர். 

இன்ஸ்டாகிராமில் கோலியை பின்தொடராத ரோஹித் சர்மா, சமீபத்தில் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை அன்-ஃபாலோ செய்தார். ஆனால், கோலி தொடர்ந்து ரோஹித் சர்மாவை பாலோ செய்து வருகிறார். ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகாவோ கோலியையும், அவரின் மனைவி அனுஷ்கா சர்மாவையும் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல அனுஷ்கா சர்மாவும், இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மாவையும், அவரின் மனைவியையும் பாலோ செய்யவில்லை. 

ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE