தோற்பதற்கு ஒரு தவறு போதும்: வங்கதேசத்துக்கு எதிரான போட்டி குறித்து ரெய்னா

நாளை மெல்போர்னில் உலகக்கோப்பை கிரிக்கெட் 2-வது காலிறுதியில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதுகின்றன. வங்கதேசத்தை எளிதாக எடைபோட மாட்டோம் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

ஆட்டத்துக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் சுரேஷ் ரெய்னா கூறியதாவது:

வங்கதேச அணியை நாங்கள் சுலபமாக நினைக்கவில்லை. நாளை ஒரு மிகப்பெரிய தினம், காலிறுதிப் போட்டி, நாம் வெற்றி பெற்றேயாக வேண்டும். ஒரு தவறு செய்தால் கூட போதும் தோல்வி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

நாம் செய்ய வேண்டியது என்னவெனில் அனைத்து துறைகளிலும் கட்டுக்கோப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகும். தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு பந்தையும் மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும். வங்கதேசத்துக்கு எதிராக காலிறுதி ஆட்டத்தில் ஆடுவது பற்றி எனக்கு உற்சாகமாக இருக்கிறது.

எங்களுக்கு எதிராக வங்கதேசம் நன்றாக ஆடியுள்ளது. 2007 உலகக்கோப்பையிலும் ஆசியக் கோப்பையிலும் இந்திய அணிக்கு எதிராக வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாங்கள் சிந்திக்கவில்லை. நாளை என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போது எங்களுக்கு முக்கியம். லீக் ஆட்டத்தில் விளையாடிய அணுகுமுறை தொடரும்.

நாளைதான் உலகக்கோப்பை போட்டி தொடங்குவதாக நாங்கள் நினைக்கிறோம்.

இன்று நாங்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது அமைதி நிலவியது. அனைவரும் வலைப்பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்தினோம். இந்த நிலையிலிருந்து நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அணியினரிடத்தில் நிறைய தன்னம்பிக்கை உள்ளது, இது மிக முக்கியம்.

ஒரு வீரராக நான் முன்னேற்றம் அடைந்துள்ளேன். நான் தோனி, யுவராஜ் சிங், மொகமட் கயீஃப் ஆகியோரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அவர்கள் முக்கியமான நடுக்களத்தில் நிறைய பங்களிப்பு செய்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து நான் நிறைய ஆடியிருக்கிறேன். இதனால் ஒருநாள் போட்டிகளில் நான் எத்தகைய பேட்டிங்கை ஆட வேண்டும் என்பதில் தெளிவு அடைந்துள்ளேன்.

2011-ற்குப் பிறகு நான் நல்ல முதிர்ச்சியடைந்துள்ளேன். ஒரு அணியாக நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளோம், எங்களிடமிருந்து சிறந்தவற்றை வெளிக்கொணர்ந்துள்ள பயிற்சியாளர்களுக்கு நன்றி", இவ்வாறு கூறினார் சுரேஷ் ரெய்னா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE