பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி: 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி.க்கு எதிராக தொடரைக் கைப்பற்றியது

By செய்திப்பிரிவு

அபுதாபியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 356 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மிகப்பெரிய டெஸ்ட் வெற்றியைப் பெற்று அந்த அணிக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ரன்கள் அளவில் பாகிஸ்தான் பெற்ற மிகப்பெரிய டெஸ்ட் வெற்றி இதுவே. வெற்றி பெற 603 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்த்து ஆஸ்திரேலியா 5-ஆம் நாளான இன்று 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி கண்டு தொடரை 0-2 என்று இழந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறியது. கடைசி 5 விக்கெட்டுகளை எந்த வித போராட்டமும் இன்றி ஆஸ்திரேலியா 8 ரன்களுக்குப் பறிகொடுத்தது. பாகிஸ்தான் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுல்பிகர் பாபர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லெக்ஸ்பின்னர் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும், ஹபீஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணியில் வார்னரின் 58 ரன்களுக்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித் 97 ரன்களை அதிகபட்சமாக எடுக்க மிட்செல் மார்ஷ் 47 ரன்களை எடுத்தார்.

ஸ்மித், மிட்செல் மார்ஷ் ஜோடி 5-வது விக்கெட்டுக்காக 107 ரன்களைச் சேர்த்தனர். இந்த ஜோடியை உடைத்த பிறகே படபடவென ஆஸ்திரேலிய பின்கள வீரர்கள் வெளியேறினர்.

முதலில் மார்ஷ், ஹபீஸ் பந்தை லெக் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 204 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்த ஸ்மித், யாசிர் ஷாவின் பந்தில் எல்.பி.ஆனார். மேல் முறையீடு செய்தார் ஆனால் பலனில்லை. காயமடைந்த ஹேடின் 13 ரன்கள் எடுத்து மேலேறி வந்து அடிக்க முயன்று பாபர் பந்தில் பவுல்டு ஆனார்.

அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே யாசிர் ஷாவிடம் ஜான்சன் பவுல்டு ஆனார். மிட்செல் ஸ்டார்க்கும் பெரிய ஷாட்டை முயற்சி செய்து யாசிர் ஷாவிடம் பவுல்டு ஆனார். கடைசியாக லயன் விக்கெட்டை பாபர் வீழ்த்த பாகிஸ்தான் வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கியது.

மிஸ்பா உல் ஹக் ஆட்ட நாயகனாகவும், யூனிஸ் கான் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மைக்கேல் கிளார்க்: "பாகிஸ்தான் அணி மிகச்சிறப்பான, ஆதிக்க பாணி கிரிக்கெட்டை ஆடினர். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று சோடை போனோம். துணைக் கண்டத்தில் துரதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலியாவின் நிலை இதுவாகவே இருந்து வருகிறது." என்றார்.

மிஸ்பா உல் ஹக்: "நாங்கள் சிறப்பாகவே ஆடிவந்தோம், ஆனாலும் வெற்றி பெற முடியாமல் இருந்தோம், ஒருநாள் போட்டிகளில் பெற்ற தோல்விகள் எங்களைக் காயப்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விட்டுவிடக்கூடாது என்று உறுதியுடன் ஆடினோம், இந்த அணியை வழி நடத்திச் செல்வதில் மிகவும் பெருமை அடைகிறேன். ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட பங்களிப்பு செய்தனர். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE