சத்தீஸ்கரில் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக மகளிர் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான மாநில அளவிலான கபடி போட்டி ஜோலார்பேட்டை ஒன்றியம், பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி அலுவலர் மணி வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் குமார், போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில், மாநிலம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இந்தப் போட்டியின் முடிவில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காவியா, லாவண்யா, தீபா, இலக்கியா, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.பவித்ரா, எஸ்.பவித்ரா, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நதியா, அபி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமாவதி, கீர்த்தனா, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மைதிலி, நெய்வேலியைச் சேர்ந்த ஜோன்ஷினி ஷாலினி ஆகிய 12 பேரும் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.