இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி விவகாரம் தொடர்பாக சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்திடம் பேசி சுமூகத் தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐஓஏ) கோரிக்கை விடுத்துள்ளார் இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் சந்தீப் ஜஜோடியா.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற சரிதா, அரையிறுதியில் நடுவர் பாரபட்சமாக செயல்பட்டதாகக் கூறி வெண்கலப் பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவரான சந்தீப் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
சரிதா விஷயத்தில் நடுவர் நடந்து கொண்டவிதம், பதக்க மேடையில் சரிதா கண்ணீர்விட்டு அழுதது மற்றும் அதனால் எழுந்துள்ள சர்ச்சைகளால் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் வருத்தமடைந்துள்ளது. சரிதாதேவி, குத்துச்சண்டை உள்ளிட்டவற்றின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக ஐஓஏ, சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்திடம் பேசி விரைவில் சுமூகத் தீர்வு எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.