இந்தியத் தொடர்: நரேன் இல்லை

சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வந்த சுநீல் நரேனின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து அவரை திரும்பப் பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஒரு டி20 போட்டி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது. வரும் 8-ம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள் தொடரில் சுநீல் நரேனும் இடம்பெற்றிருந்தார்.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வந்த நரேனின் பந்துவீச்சு குறித்து தொடர்ந்து 2-வது முறையாக சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவர் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இந்தியாவுடனான தொடரில் இருந்து அவரை திரும்பப் பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் வாரியம், “சுநீல் நரேன் தனது பந்துவீசும் முறையை ஆய்வுக்கு உட்படுத்தி மீண்டும் அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பளிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE