கொச்சி ஒருநாள்: மே.இ.தீவுகளை எளிதில் வென்றது இந்தியா!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில், 212 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 35.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எளிதில் எட்டியது.

விராட் கோலி 86 ரன்களையும், ரோஹித் சர்மா 72 ரன்களையும் விளாசி, அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தி, வெற்றிக்கு உறுதுணை புரிந்தனர். தவாண் 5 ரன்களே எடுத்தார். ரெய்னா ரன் ஏதும் எடுக்கவில்லை. யுவராஜ் சிங் 16 ரன்களையும், தோனி 13 ரன்களையும் ஆட்டமிழக்காமல் எடுத்தனர்.

முன்னதாக, இந்தியாவுக்கு 212 ரன்கள் என்ற வெற்றி இலக்கை, மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக, டெரன் பிராவோ 59 ரன்களையும், சார்லஸ் 42 ரன்களையும் சேர்த்தனர். சைமன்ஸ் 29 ரன்கள் எடுத்தார்.

சாமுவேல்ஸ் மற்றும் டிவைன் பிராவோ ஆகியோர் தலா 24 ரன்கள் எடுத்தனர். ஹோட்லர் ஆட்டமிழக்காமல் 16 ரன்கள் எடுத்தார். ஏனையோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், முகமது சமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மொத்தம் மூன்று போட்டிகளைக் கொண்டது, இந்த ஒருநாள் தொடர். முன்னதாக, டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE