இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சேவாக் என்று பயிற்சியாளர் உள்ளிட்டோர் வர்ணிக்கும் ஆதித்யா கார்வல், வினு மன்கட் அண்டர்-19 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கலக்கி வருகிறார்.
18 வயதாகும் ஆதித்யா கார்வல், இந்த ஒருநாள் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 763 ரன்களை விளாசியுள்ளார். இதில் 2 இரட்டைச் சதங்கள் என்பது கவனிக்கத் தக்கது.
இப்போதே ஸ்பான்சர்கள் இந்தச் ‘சோட்டா சேவாக்’ மீது மொய்க்கத் தொடங்கியுள்ளனர்.
இவரது ஆட்டத்தினால் பரவசமடைந்த இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா ஆதித்யாவுக்கு பேட் ஒன்றை பரிசு அளித்ததோடு, “ஆதித்யா பேட் செய்வதை பார்க்க நான் எப்போதும் ஆவலாக இருக்கிறேன்” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
வணிகப் பட்டப்படிப்பில் 2-வது ஆண்டில் இருக்கும் ஆதித்யா கார்வல் 6 அடி உயரமுள்ளவர். இவரை அருகில் இருந்து பார்த்த முன்னாள் ராஜஸ்தான் பேட்ஸ்மென் அன்ஷு ஜெயின் இவரைப் பற்றி கூறும்போது, “அவர் இயல்பாகவே ஆக்ரோஷமாக ஆடுகிறார், பந்தை அடித்து நொறுக்கும் இவரது திறமையை நான் கட்டுப்படுத்த விரும்பவில்லை. எப்போதுமே லாங் ஆன் அல்லது லாங் ஆஃபில் பீல்டர்கள் நின்று கொண்டிருந்தாலும் அவரைத் தாண்டி அடிப்பதில் பெரு விருப்பம் கொண்டவர் ஆதித்யா. அவர் இப்படியே ஆடுவதை நான் விரும்புகிறேன்.
இவரது அபூர்வத் திறமையால் இவர் ‘சோட்டா சேவாக்’ என்றே அழைக்கப்பட்டு வருகிறார். காரணம் இவர் எடுத்துள்ள 763 ரன்கள் 519 பந்துகளில் விளாசப்பட்டுள்ளது. இதில் 68 பவுண்டரிகள் 38 சிக்சர்கள் அடங்கும்.
இவரைப் பற்றி அணியின் பயிற்சியாளர் சரத் ஜோஷி கூறும்போது, "எவ்வளவு நெருக்கமாக பீல்டிங் அமைத்தாலும் இவரால் இடைவெளியை சுலபமாகக் கண்டுபிடிக்க முடிகிறது. அவர் ஒதுங்கிக் கொண்டு ஆஃப் திசையில் அடிப்பது நல்ல பந்துகளையும் கூட ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது” என்றார்.
கடந்த ஆண்டு இதே தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 60 ரன்களையே எடுத்த ஆதித்யா கார்வல், “நான் விரக்தியடைந்தேன், கிரிக்கெட்டையே விட்டுவிடலாம் என்றே தோன்றியது. இவர் வளர்ந்த சிகார் நகரத்தில் கிரிக்கெட் அவ்வளவாக இல்லை. ஆனால் இவரது நலம் விரும்பியான ஜெயின், ஆதித்யாவைத் தேற்றி தொடர்ந்து ஆடச் செய்துள்ளார்.
அதன் பிறகே தற்போது அண்டர்-19 தொடரில் இந்த ஆண்டு அவர் உ.பி. அணிக்கு எதிராக 32, ரயில்வேஸ் அணிக்கு எதிராக 263 நாட் அவுட், மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக 196, விதர்பா அணிக்கு எதிராக 212, சத்திஸ்கர் அணிக்கு எதிராக 60 என்று ரன் இயந்திரமானார்.
“என்னுடைய தந்தை நரேந்திரா ஒரு எலெக்ட்ரிகல் என்ஜினியர். அவர் என்னை கிரிக்கெட்டில் திறமையை வளர்த்துக் கொள்ள ஊக்கம் தந்தார்.” என்கிறார் ஆதித்யா, இவரது தாயார் சவிதா ஒரு வேதியியல் பேராசிரியை, இவரும் தன்னை ஊக்குவித்ததாகக் கூறுகிறார்.
முன்னால் இந்திய விக்கெட் கீப்பரும், இந்த அண்டர்-19 தொடரில் நடுவராகவும் பணியாற்றிய சதானந்த் விஸ்வநாத் ஆதித்யாவின் ஆட்டத்தைப் பார்த்துக் கூறியதாவது, “உத்தி ரீதியாக வலுவாக இருக்கிறார். எல்லா ஷாட்களையும் இவரால் ஆட முடிவதாக பவுலர்கள் தெரிவிக்கின்றனர். பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்த இவருக்கு தீராப்பசி உள்ளது. இவர் 15-வயதாக இருக்கும் போதே ஆடிப் பார்த்திருக்கிறேன். இவரது ஷாட்களில் உள்ள அழுத்தம், நீண்ட தூரம் பந்துகளை விரட்டியடிக்கும் இவரது அபூர்வத் திறமையைக் கண்டு அசந்துபோனேன்” என்றார்.
அசல் சேவாகை மீண்டும் நம் கண் முன்னே கொண்டு வருவாரா இந்த ‘சோட்டா சேவாக்’ என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.