ஆனந்த் மீண்டும் தோல்வி: சாம்பியனாக கார்ல்சனுக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

உலக செஸ் சாம்பியன்ஷிப் 9-வது சுற்றில், நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் வீழ்த்தினார்.

இதன் மூலம், உலகின் நம்பர் 1 செஸ் வீரரான கார்ல்சன் இம்முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு மிகுதியாகியுள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இன்றைய 9-வது சுற்றில், 28-வது காய்நகர்த்தலின்போது கார்ல்சன் வெற்றி கண்டார். இது, ஆனந்துக்கு எதிரான 3-வது வெற்றி ஆகும்.

இந்த வெற்றியின் மூலம் கார்ல்சன் 6 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். ஆனந்த 3 புள்ளிகளுடன் பின்னடைவில் உள்ளார்.

இன்றைய சுற்றில் வெள்ளைக் காயுடன் களமிறங்கிய ஆனந்த், வெற்றி வாய்ப்பை தவறவிட்டதால் அது கார்ல்சனுக்கு சாதகமாகிவிட்டது. ஆனந்த் தோற்றதால், 10-வது சுற்றில் கார்ல்சன் டிரா செய்தாலே உலக சாம்பியனாகிவிடலாம் என்ற சூழல் நிலவுகிறது.

கார்ல்சன் சாம்பியன் ஆகும் வாய்ப்பைத் தடுக்க வேண்டுமெனில், அடுத்த மூன்று சுற்றுகளிலுமே ஆனந்த் வெற்றி பெற்றாக வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE