இந்திய ரசிகர்கள் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று தீராத அவாவில் போட்டிகளைப் பார்த்து வருகின்றனர், ஆனால் ஹர்திக் பாண்டியா தன் வழக்கமான பாணியில் அதை ஒரு நகைச்சுவை ததும்பும் உணர்வுடன் எதிர்கொண்டார்.
இந்த உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியா பெரிய ஸ்டாராக திகழ்வார் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கூறியதையும் நாம் கேட்டிருக்கிறோம்.
இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள வீடியோவில் ஹர்திக் பாண்டியா கூறியதாவது:
அழுத்தமா எங்களுக்கா? இல்லையே சுமார் 1.5 பில்லியன் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆகவே அழுத்தம் எதுவும் இல்லை.
ஜூலை 14ம் தேதி கோப்பை என் கையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது ஒன்றுதான் இப்போதைய குறிக்கோள். அந்தக் கணத்தை நினைத்துப் பார்க்கும் போது கூட எனக்கு சிலிர்க்கிறது. என்னுடைய திட்டம் எளிதனாது - உலகக்கோப்பையை வெல்வது. நான் என்னிடமே இதனை எதிர்பார்க்கிறேன்.
இந்தியாவுக்காக ஆடுவது என்பதுதான் எனக்கு எல்லாமே. இது என் வாழ்க்கை. நான் ஆட்டத்தை மிகவும் நேசிப்பவன், சவால்களை ஏற்றுக் கொள்பவன். மூன்றரை ஆண்டுகள் இதற்காக நான் தயாரிப்பில் இருக்கிறென். ஆகவே நேரம் வந்து விட்டது.
நான் ஒரு மகிழ்ச்சியான ஆன்மா. என்ன நடந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் எனக்குப் பிடிக்கும். நானும் என் சகோதரர் குருணாலும் எப்போதும் நினைப்பது இதுதான், அவரும் கூறுவார் நாம் இருவரும் அனைத்தையும் பற்றி மகிழ்ச்சியானவர்களே என்பார்.
சில நாட்களுக்கு முன்பு என் நண்பர் ஒருவர் புகைப்படம் அனுப்பினார். அனுப்பி ‘இது உனக்கு நினைவிருக்கிறதா?’ என்றார். நான் ‘நிச்சயமாக’ என்று நினைத்துக் கொண்டேன்.
அந்த நண்பர், 2011 உலகக்கோப்பையை நாம் வென்ற போது தெருவில் நாங்கள் கொண்டாடிய போது எடுத்த புகைப்படத்தை அனுப்பித்தான் இவ்வாறு கேட்டார். அன்றைய தினம் திருவிழாதான். ஒரே இரவில் அவ்வளவு மக்களை நான் பார்த்ததில்லை, அது என்னை உணர்வுபூர்வமாக்கியது.
அன்று இந்தியா உலக சாம்பியன் ஆனபோது தெருவில் இறங்கி கொண்டாடினோம் 8 ஆண்டுகள் சென்று நான் இந்திய அணியில் உலகக்கோப்பை ஆடுகிறேன், நிச்சயம் இது இப்போது கூட கனவு மாதிரிதான் தெரிகிறது. என் அணி வீரர்கள் என் சகோதரர்கள்” இவ்வாறு கூறினார் ஹர்திக் பாண்டியா