பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியிலும் இருந்து கொண்டு மும்பை இந்தியன்ஸ் ஐகானாகவும் செயல்படும் சச்சின் டெண்டுல்கருக்கு உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குறைத்தீர்ப்பாளர் டிகே.ஜெயின் லாபம் தரும் இரட்டைப் பதவியா என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
விவிஎஸ் லஷ்மண், கங்குலி உள்ளிட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் சச்சின் டெண்டுல்கர் விவரமாக குறைத்தீர்ப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “மும்பை இண்டியன்ஸ் ஐகான் வீரராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட சச்சின் டெண்டுல்கர் எந்த வித நிதிரீதியான பயன்களையும் அடையவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் எந்த ஒரு அடிப்படையிலும் பணியாளராகவோ, ஊழியராகவோ நியமிக்கப்படவில்லை.
அவர் எந்த பதவியிலும் இல்லை, அணியின் முடிவுகளில் சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை இல்லை. ஆகவே பிசிசிஐ விதிகளின் படியோ அல்லது வேறு விதிகளின் படியோ சச்சின் டெண்டுல்கருக்கு லாபம் தரும் இரட்டைப் பதவி நோக்கம் எதுவும் இல்லை” என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐகானாக நியமிக்கப்பட்டது, பிசிசிஐ ஆலோசனைக் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு வெகு முன்பே நடந்த விஷயம். எனவே மும்பை இந்தியன்ஸுடன் சச்சினுக்கு இருக்கும் உறவுகள் பிசிசிஐ-க்கு நன்றாகத் தெரியும்.
மேலும் ஐகான் என்பத் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திலோ, அணி மேலாண்மையிலோ, தொடர்பில்லாதது எந்த வித வர்த்தகப் பதவியையும் சச்சின் வகிக்கவில்லை. ஒரு வீரராக தன் அனுபவத்தை கிரிக்கெட் நுணுக்கங்களை அவர் பகிர்ந்து கொள்கிறார், இதற்காக அவர் அங்கிருந்து நிதி ரீதியான பயன்களை எதுவும் பெறவில்லை.
ஆகவே வீரர்கள் அமரும் இடத்தில் சச்சின் ஏன் அமர்கிறார் என்ற கேள்விகள், ஐயமெல்லாம் அபத்தமானது. மேலும் இது குறித்து சச்சின் டெண்டுல்கர் குறைதீர்ப்பாளர் முன்னிலையில் தன் சட்டப்பிரதிநிதிகளுடன் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் தயாராக இருப்பதாக சச்சின் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.