இன்சியானில் நடைபெறும் 17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் மற்றும் மகளிர் டென்னிஸ் அணிகள் காலிறுதியில் தோற்று பதக்க வாய்ப்பை இழந்தது.
ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் கஜகஸ்தான் அணியிடம் காலிறுதியில் தோல்வி தழுவி பதக்க வாய்ப்பை நழுவவிட்டன.
ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சனம் சிங், கஜகஸ்தான் வீரர் நெடவ்யேசோவ் என்பவரிடம் 6-7, 6-7 என்ற செட்களில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி, 2-6, 7-6, 1-6 என்று போராடித் தோல்வி தழுவினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 3 நிமிடங்கள் வரை நீடித்தது.
முற்றிலும் தோல்வி என்ற இழிவை இந்திய இரட்டையர் ஜோடி தடுத்து நிறுத்தியது. சாகேத் மைனேனி, திவிஜ் சரண் ஜோடி 7-5, 7-5 என்று கஜகஸ்தான் ஜோடியான ஆந்த்ரே கொலுபேவ் மற்றும் அலெக்சாண்டர் நெடோவ்யேசோவ் ஜோடியை வீழ்த்தியது.
மகளிர் பிரிவிலும் தோல்வி தழுவியதால் பதக்க வாய்ப்பு பறிபோனது.