மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இறகுபந்து போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் நடந்து வந்தது. மாவட்ட இறகு பந்து சம்மேளனம் சார்பில் நடந்த இந்தப் போட்டியை ஆட்சியர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்.
நான்கு நாட்கள் நடந்த இந்தப் போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 260 அணிகள் பங்கேற்று விளையாடின. நேற்று முன்தினம் மாலை பரிசு வழங்கும் விழா நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர்அலி, திருப்பூர் காவல் ஆணையர் ஷேசசாயி ஆகியோர் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னை கரன்ராஜன் முதலிடத்தையும், சென்னை அருண்குமார் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் சென்னை அஜீத்ஹரிதாசன் - மணிகண்டன் ஜோடி முதலிடத்தையும், சென்னை அருண்குமார்- வேலன் ஜோடி இரண்டாமிடத்தையும் பிடித்தது.
பெண்கள் பிரிவு
பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோவை அதிதீ முதலிடத்தையும், சென்னை ஸ்ருதி இரண்டாமிடத்தையும் பிடித்தனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் கேஷ்மா - அனுசரியா ஜோடி முதலிடத்தையும், அதிதீ - ஸ்ருதி இரண்டாமிடத்தையும் பிடித்தனர். கலப்பு இரட்டையர் பிரிவில் முகமதுரெகான் - அதிதீ முதலிடத்தையும், சூர்யபிரகாஷ் - கேஷ்மா ஜோடி இரண்டாமிடத்தையும் பிடித்தது.
பரிசளிப்பு விழாவில், நிர்வாகிகள் உதயகுமார், சையத்இர்பானுல்லா, லோகநாதன், அன்சர்தீன், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட இறகுபந்து செயலாளர் ஷராபத்துல்லா நன்றி கூறினார்.