அழாதீங்க... நீங்க பிரமாதமா ஆடினீங்க: தோற்ற வீராங்கனை அழுதபோது இளகிய செரீனா ஆறுதல் கூறி தேற்றினார்

செரீனா வில்லியம்ஸ் என்றால் ஆக்ரோஷம் வேகம், வெளிப்படையான பேச்சு, அச்சமற்ற தன்மை போன்ற குணங்கள் நம் நினைவுக்கு வரலாம், ஆனால் அவரிடம் உள்ள மனிதார்த்தக் கணமாக ஒரு சம்பவம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் நடந்தது.

 

18 வயது உக்ரைன் நாட்டு டென்னிச் வீராங்கனை டயானா யஸ்ட்ரெம்ஸ்கா.  இவருக்கும், செரீனாவுக்கும் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் ஒற்றையர் ஆட்டத்தில் டயானா 6-2, 6-1 என்று அடித்து நொறுக்கப்பட்டார். 18 வயது இளம் பெண் ஆகையால் இந்த படுதோல்வியைத் தாங்க முடியாமல் வலைக்கு அருகில் செரினாவுக்கு கைகொடுக்க வரும்போது அழுதுவிட்டார்.

 

அப்போது செரீனா தன் வலது கையை அவர் தோளில் போட்டு  “உனக்கு இன்னும் வயது உள்ளது, நீ இளம் வீராங்கனை, நீ பிரமாதமாக ஆடினாய், அழாதே” என்று தேற்றியது ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்தியாகப் பரவி வருகிறது.

 

பிறகு இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர், அவர் முதுகைத் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார் செரீனா வில்லியம்ஸ்.

 

இது குறித்து செரீனா பிற்பாடு கூறிய போது, “அவர் மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பார் என்றே நினைக்கிறேன். அவர் இங்கு வெறுமனே ஆட மட்டும் வரவில்லை. வெற்றி பெற வேண்டும் என்று வந்திருக்கிறார். அதுதான் என் இருதயத்தை உடைத்து விட்டது.  அவரிடம் திறமை உள்ளது, அவரிடம் இந்த அணுகுமுறை எனக்குப் பிடித்திருக்கிறது.

 

பிறகு அறையிலும் டயானா யஸ்ட்ரம்ஸ்காவிடம் செரீனா வில்லியம்ஸ், “நீ இளம் வீராங்கனை, இன்னும் வயது உள்ளது, நீ நன்றாக ஆடுகிறாய், எதிர்காலத்தில் சிறந்த வீராங்கனையாக வருவாய்” என்று கூறியதைப்பற்றி உக்ரன் வீராங்கனை நெகிழ்ச்சியுடன் கூறும்போது, “இந்த வார்த்தைகளை ஒரு லெஜண்டிடமிருந்து கேட்ட போது என் கவலைகளை மறந்து விட்டென்” என்றார்.

 

யஸ்ட்ரெம்ஸ்கா முதல் சுற்றில் 2011 யு.எஸ் ஓபன் சாம்பியன் ஸ்டோஸர் என்பவரையும், 2வது சுற்றில் 23ம் தரவரிசையில் உள்ள கார்லா சுவாரேஸ் நவாரோவை வீழ்த்தினார். இந்த டயானா யஸ்ட்ரெம்ஸ்கா 57ம் தரவரிசையில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE