‘கேட்ச்களை விட்டோம், ரன் அவுட் விட்டோம், நடுஒவர்களில் ரன்களை வழங்கினோம்...  மற்றபடி நன்றாக ஆடினோம்’

பிரிஸ்பன் டி20 போட்டியில் டக்வொர்த் முறையில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்ததற்கு பீல்டிங்கில் சொதப்பலே காரணம் என்று ஷிகர் தவண் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி பிஞ்சுக்குக் கேட்சை 4வது ஓவரில் விட்டார். மேக்ஸ்வெலுக்கு ரன் அவுட் வாய்ப்பில் ஸ்டம்புக்கு வராமல் இருந்தார், கலீல் அகமெட் மோசமாக வீசி 42 ரன்களை 3 ஓவர்களில் கொடுத்ததோடு, மழைக்கு முன்னால் ஸ்டாய்னிசுக்கு கையில் வந்த கேட்சை விட்டார், பிறகு பீல்டிங்கில் பந்தை நழுவ விட்டது என்று இந்திய அணி இன்று சொதப்பியது தோல்விக்கு ஒருகாரணம்.

ஷிகர் தவண் 42 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 76 ரன்கள் விளாசினார். தினேஷ் கார்த்திக் 13 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். ஆனால் இந்திய அணியினால் வெற்றிக்கோட்டை தாண்ட முடியவில்லை.

இந்நிலையில் ஷிகர் தவண் கூறியதாவது:

நல்ல கிரிக்கெட், நெருக்கமான போட்டி, இரு அணிகளும் நன்றாக ஆடினோம். இதிலிருந்து தன்னம்பிக்கையை அடுத்தப் போட்டிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

களத்தில் தவறவிடப்பட்ட வாய்ப்புகள் நிச்சயம் தாக்கம் செலுத்தவே செய்யும். கேட்சை விட்டது, ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டது எல்லாம் தாக்கம் ஏற்படுத்தும், ஆனால் இவையில்லாமல் ஆட்டமில்லை. நடு ஓவர்களில் கூடுதல் ரன்களைக் கொடுத்தோம். மற்றபடி நன்றாக ஆடினோம்.

நாங்கள் பெரிய இலக்கை விரட்டுகிறோன் என்பதை அறிந்திருந்ததால்தான் அந்த ஓவரில் அடிக்கப் போய் அவுட் ஆனேன். ஆடம் ஸாம்பா இந்தப் போட்டியில் செல்வாக்குச் செலுத்தினார், அவரது புள்ளிவிவரங்கல் மிக நன்றாக உள்ளன.  நமக்கு ரன்கள் தேவை என்ற சமயதில் அவர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் (ராகுல், கோலி). அங்கிருந்து ஆட்டம் நம்மிடமிருந்து நழுவிச் சென்றது. ஸாம்ப்பா நல்ல கட்டுப்பாட்டுடன் அருமையாக வீசினார்.

அனைத்துப் பவுலர்களையும் அடித்து ஆட வேண்டிய இலக்காகும் இது. கால அவகாசமும் இல்லை. ஸாம்ப்பாவை அடிக்கப் போனோம், ஆனால் அவுட் ஆனோம். அடுத்த போட்டியில் அவருக்கு எதிராக திட்டம் வகுத்து களத்தில் செயல்படுத்துவோம்.

பெரிய மைதானங்களில் ஆடுவது என்பது சிந்தனைக்கும் அனுபவத்துக்கும் உரியது. முன்பு இங்கு ஆடியுள்ளோம் அந்த அனுபவம் கைகொடுத்தது. ரிஷப் பந்த் இளைஞர் முதன்முதலில் இங்கு ஆடுகிறார். ஆனாலும் நன்றாக ஆடினார்.

பிரிஸ்பன் பிட்சில் எப்போதும் கூடுதல் பவுன்ஸ் இருகும். கொஞ்சம் ஸ்விங்கும் ஆனது, அதனால்தன நாம் நன்றாக ஆடினோம் என்று கூறுகிறேன்.  சுவராசியமான ஆட்டம் 4 ரன்களில்தான் தோற்றோம்ன்.

அடுத்த போட்டி மெல்பர்னில், இது எனக்கு தாயகம் திரும்புதல் போன்றதாகும்.  என் குடும்பம் இங்குதான் உள்ளது, ஆகவே மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு கூறினார் ஷிகர் தவண்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE