ஆஸ்திரேலியாவை வீழ்த்த ரிஷப் பந்த், பும்ரா முக்கியம்: இயன் சாப்பல்

By ஆர்.முத்துக்குமார்

வங்கதேசத்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி சதம் கண்டு ஃபார்முக்குத் திரும்பிய ரிஷப் பந்த் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலிய மண்ணில் வீழ்த்த மிக மிக முக்கியமான இந்திய வீரர்கள் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார்.

முன்னணி கிரிக்கெட் ஆங்கில இணையதளம் ஒன்றில் எழுதியுள்ள பத்தியில் இயன் சாப்பல் கூறியதாவது: வங்கதேசம், நியூஸிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் தொடர்களை ஆடுவதன் மூலம் ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி சிறப்பான முறையில் தயாராகி வருகிறது.

இந்த இரண்டு டெஸ்ட் தொடர்களையும் வெல்வதோடு இந்திய அணியின் பிரதான நோக்கம் என்னவாக இருக்குமெனில் நிறைய வீரர்களை ஃபார்முக்குக் கொண்டு வருவதும் காயங்களில்லா அணியாக உருவெடுப்பதும், குறிப்பாக பும்ரா, ரிஷப் பந்த் ஆகியோரது ஃபார்மும் முக்கியமென கருதுவார்கள்.

பயங்கரமான கார் விபத்தில் உயிர் பிழைத்து மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குள் நுழைந்து பந்த் மீட்டெழுச்சிக் கண்டது உண்மையில் மிகப்பெரிய பாராட்டுதலுக்குரியது. பந்த் இந்திய அணியில் மிக முக்கியமான பேட்டர்-விக்கெட் கீப்பர். அவர் தன் ஃபார்மின் உச்சத்தில் இருப்பது ஆஸ்திரேலியா தொடரில் பெரிய பலன்களை அளிக்கும்.

2021 ஆஸ்திரேலிய தொடரில் ரிஷப் பந்த், தன் அபாரமான திறமைகளை சிட்னியிலும் பிரிஸ்பனிலும் வெளிப்படுத்தினார். அவரது புத்தாக்க ஸ்ட்ரோக் ப்ளேயுடன் கூடிய ஆக்ரோஷம் இந்திய திட்டங்களில் முக்கியப் பங்கு வகிப்பதாகும். அவரது விக்கெட் கீப்பிங்கும் முக்கியம். ஆஸ்திரேலிய பிட்ச்களுக்கு பந்த், ஒரு சிறந்த விக்கெட் கீப்பர். ஒரு கீப்பர் இருபுறமும் அதிக தூரங்களை கவர் செய்ய முடிகிறது என்றால், அணியின் ஒட்டுமொத்த பீல்டிங் தரமும் மேம்படும்.

ஏனெனில், விக்கெட் கீப்பர் அதிக தூரம் கவர் செய்ய முடியும் என்றால் ஸ்லிப் பீல்டர்கள் வைடாக நின்று மேலும் சில தூரங்களைக் கவர் செய்ய ஏதுவாக இருக்கும். அதே போல் ஸ்பின் பவுலிங்கிற்கு ஸ்டம்புக்கு அருகில் நின்று கீப் செய்வதும் ரவி சாஸ்திரியின் உத்வேகத்தினால் அவருக்கு இப்போது சிறப்பாகக் கைகூடியுள்ளது.

ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றோரின் ஆல்ரவுண்ட் திறமைகளினால் இந்தியா ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் 5 பவுலர்களைக் கொண்டுள்ள அணியாக இருக்கும் இது ஆஸ்திரேலியாவில் நிச்சயம் கூடுதல் பலன்களை அளிக்கும். பும்ரா பந்து வீச்சுத் தலைவர். சிராஜ் கடந்த ஆஸ்திரேலியத் தொடரில் நன்றாக வீசினார், இருவரும் ஃபார்மில் இருப்பது முக்கியம்.

முகமது ஷமி முழு உடல் தகுதி பெற்று விட்டால் அது மிகப்பெரிய பலம். ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருப்பதும் கூடுதல் பலம் சேர்க்கும். ஸ்பின் ஜடேஜா, அஸ்வின் கைகளில் பாதுகாப்பாக உள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியாவின் சில பிட்ச்களில் குல்தீப் யாதவையும் நாம் ஒதுக்கி விட முடியாது. பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நன்றாக இருக்கிறார். ஆனால் ஆஸ்திரேலியாவில் அவர் நல்ல ஃபார்மில் இருக்க வேண்டும். ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகளாக இருக்க வேண்டும். பந்த் மற்றும் பும்ரா சிறப்பாக ஆடினால் இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அந்தப் பத்தியில் எழுதியுள்ளார் இயன் சாப்பல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE