சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 280 ரன்களில் வெற்றி பெற்றது. சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் சதம் விளாசினார்.
வெற்றிக்கு பிறகு அவர் தெரிவித்தது: “இந்தப் போட்டி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சென்னையில் விளையாட எனக்கு மிகவும் பிடிக்கும். காயத்திலிருந்து மீண்ட பிறகு மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாட விரும்பினேன். அந்த வகையில் காயத்துக்கு பிறகு இதுதான் நான் விளையாடும் முதல் போட்டி. அதில் நான் சிறப்பாக செயல்பட்டேன் என கருதுகிறேன்.
இது மிகவும் எமோஷனல் ஆனது. ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவிக்கவே விரும்புகிறன். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட எனக்கு அதிகம் பிடிக்கும். அந்த வகையில் மீண்டும் களத்துக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. வெளியில் யார் என்ன சொல்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது.
எனது வழியில் நான் ஆட்டத்தின் கள சூழலை அறிய முயற்சிப்பேன். அணி மூன்று விக்கெட்டுகளை விரைந்து இழந்திருக்கும் நேரத்தில் பார்ட்னர்ஷிப் அமைப்பது மிகவும் முக்கியம். அதை தான் கில் உடன் இணைந்து நான் செய்திருந்தேன். எனக்கும் அவருக்கும் சிறந்த புரிதல் மிக்க உறவு உள்ளது. அந்த வகையில் அவருடன் இணைந்து இதை செய்தது எனக்கு ஸ்பெஷல்” என பந்த் தெரிவித்தார்.
34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள பந்த், 2419 ரன்கள் குவித்துள்ளார். 11 அரைசதம் மற்றும் 6 சதம் பதிவு செய்துள்ளார். சேப்பாக்கத்தில் வங்கதேச அணிக்கு எதிராக 128 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்திருந்தார்.