சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி: அஸ்வின் அபாரம்!

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 19-ம் தேதி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசியது.

அஸ்வின் - ஜடேஜா கூட்டணி: முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் ரோகித், கில், கோலி, பந்த், ஜெய்ஸ்வால், ராகுல் ஆகியோர் ஆட்டமிழந்திருந்தனர். இக்கட்டான அந்த சூழலில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இணைந்து 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. பலம் வாய்ந்த இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆகாஷ் தீப், சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

கில் - பந்த் கூட்டணி: இரண்டாவது இன்னிங்ஸை 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தொடங்கியது. ரோகித், ஜெயஸ்வால் மற்றும் கோலி ஆகியோர் விரைந்து ஆட்டமிழந்தனர். அந்த சூழலில் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்கள் இருவரும் 167 ரன்கள் இணைந்து எடுத்திருந்தனர். இருவரும் சதம் கடந்து அசத்தினர். இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது.

515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை வங்கதேச அணி விரட்டியது. மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முடிவதற்குள் எஞ்சியிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த இன்னிங்ஸில் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 127 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தார். ஜாகிர் 33, ஷத்மான் இஸ்லாம் 35 மற்றும் ஷகிப் 25 ரன்கள் எடுத்திருந்தனர். 62.1 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்தது. இதன் மூலம் 280 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5+ விக்கெட்டுகளை அஸ்வின் 37-வது முறையாகும். இதன் மூலம் ஷேன் வார்னேவின் சாதனையை அவர் சமன் செய்தார். ஜடேஜா 3 மற்றும் பும்ரா 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அஸ்வின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE