IND vs BAN | தடுமாறும் வங்கதேசம்: 3-வது நாளில் வலுவான நிலையில் இந்தியா!

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 158 ரன்களைச் சேர்த்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 357 ரன்கள் தேவையாக உள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 339 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து விளையாடிய வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 257 ரன்களை சேர்த்தது. இதில் ஷுப்மன் கில் 119 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். ரிஷப் பந்து 109 ரன்களை குவித்து அசத்தினார்.

515 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் களமிறங்கினர். பொறுமையாக ஆடிய இந்த இணையை பும்ரா பிரித்தார். ஜாகிர் ஹசன் 33 ரன்களில் வெளியேறினார். அடுத்து 35 ரன்களில் ஷத்மான் இஸ்லாமை அவுட்டாக்கினார் அஸ்வின். கேப்டன் நஜ்முல் ஹுசைன் மட்டும் பொறுப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார். மறுபுறம் களமிறங்கிய மோமினுல் ஹக் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் தலா 13 ரன்களில் பெவிலியன் திரும்பினர். நஜ்முல் ஹுசைன் 56 பந்துகளில் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையூட்டினார்.

இதையடுத்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. நஜ்முல் 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்க தேச அணியின் வெற்றிக்கு 357 ரன்கள் தேவை. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE