சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டி சமீபத்தில் பாரீஸ் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில் பாராலிம்பிக் கில் வெண்கலம் வென்று தாயகம்திரும்பியுள்ள தடகள வீரர் மாரியப்பன், சென்னைமுகாம் அலுவலகத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பாராலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதை கருத்தில் கொண்டு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் தடகள வீரர் மாரியப்பன் பெருமை தேடித் தந்துள்ளார். அவர் மென்மேலும் பல்வேறு சாதனைகளை படைக்க, நம்முடையை விளையாட்டு மேம்பாட்டுத் துறை என்றும் துணை நிற்கும். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் விளையாட்டுத் துறை செயலர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.