ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

By செய்திப்பிரிவு

ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் முதல் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியிருந்தது. இந்நிலையில் இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தானுடன் மோதியது.

இதில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணி முதல் கோலை அடித்தது. அகமது நதீம் அடித்த கோல் காரணமாக பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்ற ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது.

தொடர்ந்து 19-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்ற இந்திய அணி2-1 என முன்னிலை பெற்றது. இதன் பின்னர் கடைசி வரை போராடியும் பாகிஸ்தான் அணியால் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவு செய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE