சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 243 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஹைதராபாத் அணி.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்று வந்த இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் 417 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய சத்தீஸ்கர் 181ரன்களுக்கு சுருண்டது. 236 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஹைதராபாத் 70.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 518 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சத்தீஸ்கர் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 61.1 ஓவர்களில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதிகபட்சமாக ஆயுஷ் பாண்டே 117, ஷசாங் சந்திரசேகர் 50 ரன்கள் சேர்த்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் தனய் தியாகராஜன் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். 243 ரன்கள் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு கோப்பையுடன் ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த சத்தீஸ்கர் அணி ரூ.2 லட்சம் பரிசுத் தொகையை பெற்றது.