பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்றோருக்கு தலா ரூ.75 லட்சம் - மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.75 லட்சம், வெள்ளிக்கு ரூ.50 லட்சம், வெண்கலத்துக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகள் முடிவடைந்ததை அடுத்து, போட்டியில் வெற்றிபெற்ற இந்திய வீரர்கள் இன்று தாயகம் திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும்.

வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி போன்ற கலப்பு அணிகள் போட்டிகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ரூ.22.5 லட்சம் வழங்கப்படும். பாராலிம்பிக்ஸ் மற்றும் பாரா ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றில் நாடு உயர்ந்து வருகிறது. 2016 இல் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா 4 பதக்கங்களை மட்டுமே வென்றது. 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளின்போது 19 பதக்கங்களை நமது வீரர்கள் வென்றனர். பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் 29 பதக்கங்களை குவித்து, 18 வது இடத்தை இந்தியா வென்றுள்ளது.

அடுத்தாக, 2028ல் நடைபெற உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக்ஸில் இன்னும் அதிக பதக்கங்கள் மற்றும் தங்கப் பதக்கங்களை வெல்வதற்கு அனைத்து பாரா-தடகள வீரர்களுக்கும் அரசு அனைத்து வசதிகளையும் வழங்கும்" என தெரிவித்தார்.

பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஏழு தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 29 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா தனது சிறப்பான ஆட்டத்தால் 50 பதக்கங்களை முதல்முறையாக கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE