சென்னை: தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி நாளை (செப்டம்பர் 11-ம் தேதி) முதல் 13-ம் தேதிவரை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இந்திய தடகள கூட்டமைப்பின் ஆதரவுடன் இந்த போட்டியை தமிழ்நாடு தடகள சங்கம் நடத்துகிறது.
1995-ம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச போட்டியை தற்போதுதான் தமிழக தடகள சங்கம் நடத்த உள்ளது. இந்த தொடரில் இந்தியா (62 பேர்), பாகிஸ்தான் (12), இலங்கை (54), பூட்டான் (5), நேபாளம் (9), வங்கதேசம் (16), மாலத்தீவுகள் (15) ஆகிய 7 நாடுகளில் இருந்து மொத்தம் 173 பேர் கலந்து கொள்கின்றனர்.
இதில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வருண் ஊரி மனோகர் (100 மீட்டர் ஓட்டம்), ஹரிஹரன் கதிரவன் (110 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), ஜிதின் அர்ஜுனன் (நீளம் தாண்டுதல்), ரவி பிரகாஷ் (டிரிப்பிள் ஜம்ப்), கார்த்திகேயன் (4 x100 மீட்டர் தொடர் ஓட்டம்), அபிநயா ராஜராஜன் (100 மீட்டர் ஓட்டம்), பிரதிக் ஷா யமுனா (நீளம் தாண்டுதல், டிரிப்பிள் ஜம்ப்), லக் ஷன்யா (நீளம் தாண்டுதல்), கனிஸ்டா டீனா (4x 400 மீட்டர் தொடர் ஓட்டம்) ஆகிய 9 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.