பாரிஸ்: பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 29 பதக்கங்களைப் பெற்று 18-வது இடத்தை கைப்பற்றியது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்றுடன் பாராலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா சார்பில் மொத்தம் 29 பதக்கங்கள் வெல்லப்பட்டன. இந்திய வீரர், வீராங்கனைகள் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களை கைப்பற்றினர். இதையடுத்து பட்டியலில் இந்தியா 18-வது இடத்தை பிடித்தது.
இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன், துளசிமதி முருகேசன், மணிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் பதக்கம் வென்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நவ்தீப் சிங்தங்கமும், 200 மீட்டர் டி12 பிரிவில் இந்தியவீராங்கனை சிம்ரன் வெண்கலமும் வென்றனர். 219 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தையும், 124 பதக்கங்களுடன் கிரேட் பிரிட்டன் 2-வது இடத்தையும், 104 பதக்கங்களுடன் அமெரிக்கா 3-வது இடத்தையும் பிடித்தன.