அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார் அரினா சபலெங்கா

By செய்திப்பிரிவு

நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் பெலாரஸ் நாட்டு வீராங்கனை அரினா சபலெங்கா. நடப்பு ஆண்டில் அவர் வென்றுள்ள இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவை 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்றார்.

இது சபலெங்கா வென்றுள்ள மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டு முறை பட்டம் வென்றுள்ளார். 26 வயதான அவர் பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டனில் அரையிறுதி வரை விளையாடி உள்ளார். அமெரிக்க ஓபனில் அவர் பட்டம் வென்றுள்ளது இதுவே முதல்முறை. பிரதான தொடரில் இறுதிக்கு முன்னேறிய ஜெசிகா பெகுலா பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர் மற்றும் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் ஆகியோர் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE