பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: 21 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை; மாரியப்பனுக்கு வெண்கலம்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு நடைபெற்று வருகிறது. இதில்நேற்று மாலை வரை இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றிருந்தது. பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை கைப்பற்றுவது இதுவே முதன்முறையாகும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களை (5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம்) இந்தியா வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

போட்டியின் 6-வது நாளான நேற்று முன்தினம் மட்டுமே இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கலம் என5 பதக்கங்கள் வென்றது. ஆடவருக்கான ஈட்டி எறிதல் எஃப் 46பிரிவில் இந்தியாவின் அஜீத் சிங்(65.62 மீட்டர்) வெள்ளிப் பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜார் (64.96 மீட்டர்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் டி 63 பிரிவில் இந்தியாவின் சரத் குமார் (1.88 மீட்டர்) வெள்ளிப் பதக்கமும், மாரியப்பன் (1.85 மீட்டர்) வெண்கலப் பதக்கமும் வென்றனர். அமெரிக்காவின் பிரெக் எஸ்றா (1.94 மீட்டர்) தங்கப் பதக்கம் வென்றார். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். 2016-ம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற மாரியப்பன், டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.

மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் டி 20 பிரிவில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி பந்தய தூரத்தை 55.82 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

போட்டியின் 7-வது நாளான நேற்று ஆடவருக்கான குண்டு எறிதலில் எஃப் 46 பிரிவில் இந்தியாவின் சச்சின் கிலாரி 16.32 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கனடாவின் கிரேக் ஸ்டீவர்ட் (16.38 மீட்டர்)தங்கப் பதக்கமும், குரோஷியாவின் லூக்கா பகோவிச் (16.27 மீட்டர்) வெண்கலகப் பதக்கமும் வென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE