பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரில் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஆண்களுக்கான குண்டு எறிதல் (F46) பிரிவின் இறுதிப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் குண்டு வீசி 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். கனடாவின் கிரெக் ஸ்டீவர்ட் 16.38 மீட்டர் தூரம் வீசி தங்கமும், குரோசிய வீரர் 16.27 மீட்டர் தூரம் வீசி வெண்கலமும் வென்றனர். இதன் மூலம் இந்தியா மொத்தம் 21 பதக்கங்களை பாராலிம்பிக்ஸில் இதுவரை வென்றுள்ளது. 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்கள் கிடைத்துள்ளன.