சென்னை: பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சிவனுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ''பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சிவனுக்கு எனது வாழ்த்துகள்.
பாராலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் பிரிவில் இந்தியா வென்றுள்ள 5 பதக்கங்களில் 3 தமிழக வீரர்களால் பெறப்பட்டுள்ளது. பாராலிம்பிக்கில் தமிழக தடகள வீரர்களின் வரலாற்று சாதனைகளால் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் தொடர்ந்து கலந்து கொள்ளும் எதிர்கால போட்டிகளில் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறோம்'' என்றுஅதில் தெரிவித்துள்ளார்.