பாராலிம்பிக்ஸ் ஓட்டம்: இந்திய வீராங்கனை ப்ரீத்தி பால் வெணகலம் வென்று சாதனை!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தொடரின் மகளிருக்கான 100 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ப்ரீத்தி பால் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பாராலிம்பிக்ஸ் தடகள போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான 100 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பால் 100 மீட்டர் தூரத்தை 14.21 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் வெண்கல பதக்கத்தை வென்றார். இதில் 13.58 வினாடிகளில் 100 மீட்டரை கடந்து சீன வீராங்கனை சவு சியா தங்கம் வென்றார். மற்றொரு சீன விராங்கனை குவோ 13.74 வினாடிகளுடன் 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

தடகள போட்டியில் இந்தியாவின் முதல் பதக்க கணக்கை தொடங்கி வைத்துள்ளார் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பால். முன்னதாக, கடந்த மேமாதம் நடைபெற்ற பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 200 மீட்டர் பிரிவில் 223 வயதான ப்ரீத்தி வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவுக்கு மொத்தம் 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரவில் இந்தியாவின் அவனி லேகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்க்கது.

T35 பிரிவு என்றால் என்ன? - பாராலிம்பிக்ஸின் ஓட்டப்பந்தயத்தில் t35பிரிவு ஹைபர்டோனியா, அட்டாக்ஸியா, பெருமூளை வாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE