உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க முயற்சிப்பேன்: சூர்யகுமார் யாதவ்

By செய்திப்பிரிவு

கோவை: உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க முயற்சிப்பேன் என இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் அவரது தலைமையில் மும்பை அணி விளையாடி வருகிறது.

33 வயதான சூர்யகுமார் யாதவ், இந்திய அணிக்காக கடந்த 2021 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 71 டி20 போட்டிகள், 37 ஒருநாள் போட்டிகள் மற்றும் 1 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். உலக கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார்.

இந்நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். “இந்திய அணியில் இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர். நான் டெஸ்ட் போட்டிகளில் முன்பே அறிமுகமாகி இருந்தாலும் என்னால் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போய்விட்டது. எதிர்வரும் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க முயற்சிப்பேன்” என கூறியுள்ளார்.

139 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 82 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாடி உள்ளார். அதன் மூலம் 9,255 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE