“ஏலத்தில் ரோகித் அதிக தொகைக்கு வாங்கப்படுவார்” - சஞ்சய் பங்கர்

By செய்திப்பிரிவு

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலத்தில் ரோகித் சர்மா பங்கேற்றால் நிச்சயம் அதிக தொகைக்கு வாங்கப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்காக உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டனாக ரோகித் சர்மா அறியப்படுகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2011 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் ஆனதும் அவரது தலைமையில் தான்.

இந்த சூழலில் கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. அது ரோகித் மற்றும் மும்பை அணி ஆதரவாளர்களை அதிர்ச்சி கொள்ள செய்தது. தொடர்ந்து எதிர்வரும் 2025-க்கான ஐபிஎல் சீசனில் மும்பை அணியில் இருந்து ரோகித் வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது. அந்த வகையில் ரோகித், அடுத்த சீசனுக்கான ஏலத்தில் பங்கேற்றால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் போன்ற அணிகள் பெரிய தொகைக்கு அவரை வாங்க தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

“ரோகித் சர்மா ஏலத்தில் பங்கேற்றால் நிச்சயம் பெரிய தொகைக்கு அவரை ஐபிஎல் அணிகள் வாங்கும். இந்திய கிரிக்கெட் அணி அயலக மண்ணில் சிறந்து விளங்க கோலியின் பங்களிப்பு அதிகம். உள்நாட்டில் வாகை சூடும் இந்தியாவை வெளிநாடுகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் விரும்பினார். அதை செய்து காட்டினார்” என சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் இதனை கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE