ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது.
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 113 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 448 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171,சவுத் சகீல் 141 ரன்கள் விளாசினர்.
இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணி 2-வது நாள்ஆட்டத்தின் முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்தது. நேற்று 3-வது நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தொடர்ந்து விளையாடியது. ஜாகீர் ஹசன் 12, கேப்டன் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 16 ரன்களில்நடையை கட்டினர். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மொமினுல் ஹக், ஷத்மான் இஸ்லாமுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அரை சதம் கடந்த நிலையில் மொமினுல் ஹக் 76 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களில் குர்ராம் ஷாஸாத்பந்தில் போல்டானார். சதம் அடிப்பார் எனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷத்மான் இஸ்லாம் 183 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 93 ரன்களில் மொமது அலி பந்தில் போல்டானார்.இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஷகிப் அல் ஹசன் 15 ரன்களில் நடையை கட்டினார்.
6-வது விக்கெட்டுக்கு முஸ்பிகுர் ரஹிமுடன் இணைந்த லிட்டன் தாஸ் சீராக ரன்கள் சேர்க்க வங்கதேச அணி 89-வது ஓவரில் 300 ரன்களை கடந்தது.நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் வங்கதேசஅணி 92 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்தது. முஸ்பிகுர் ரஹிம் 55 ரன்களும், லிட்டன் தாஸ் 52 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.