ஜேமி ஸ்மித் சதம் விளாசல்: இங்கிலாந்து 358 ரன்கள் குவிப்பு

By செய்திப்பிரிவு

மான்செஸ்டர்: இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 74 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 61 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது.

பென் டக்கெட் 18, ஆலி போப் 6, லாரன்ஸ் 30, ஜோ ரூட் 42, ஹாரி புரூக் 56, கிறிஸ் வோக்ஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜேமி ஸ்மித் 72, கஸ் அட்கின்சன் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது.

ஜேமி ஸ்மித் 136 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை விளசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய கஸ் அட்கின்சன் 20 ரன்கள் எடுத்த நிலையில் ரத்னாயகே பந்தில் ஆட்டமிழந்தார். நிதானமாக பேட் செய்து வந்த ஜேமி ஸ்மித் III ரன்கள் எடுத்த நிலையில் பிரபாத் ஜெயசூர்யா பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன் பின்னர் மார்க்வுட் 22, மேத்யூ பாட்ஸ் 17 ரன்களில் நடையை கட்ட இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 85.3 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டோ 4, பிரபாத் ஜெயசூர்யா 3, விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. நிஷான் மதுஷ்கா, குஷால் மெண்டிஸ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினர். திமுத் கருணாரத்னே 27 ரன்களில் மார்க் வுட் பந்தில் வெளியேறினார். தினேஷ் சந்திமால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். தனஞ்ஜெயா டி சில்வா 11 ரன்னில் மேத்யூ பாட்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். தேனீர் இடைவேளையில் இலங்கை அணி 30 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 48 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 6 1 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE