யு-17 உலக மல்யுத்த சாம்பியனான நேஹா: வினேஷ் போகத்தின் கிராமத்தை சேர்ந்தவர்

By செய்திப்பிரிவு

அம்மான்: 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் நேஹா சங்வான். மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் சொந்த கிராமமான பலாலி கிராமத்தை சேர்ந்தவர் இவர்க.

ஜோர்டான் நாட்டில் உள்ள அம்மான் நகரில் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 57 கிலோ எடை பிரிவில் ஜப்பான் நாட்டின் சோட்ஸுய்யை இறுதி சுற்றில் வீழ்த்தி தங்கம் வென்றார். இந்த மோதலில் 10-0 என்ற கணக்கில் நேஹா வெற்றி பெற்றார்.

17 வயதான நேஹா சங்வான், ஹரியாணா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள பலாலி கிராமத்தை சேர்ந்தவர். ஏழு வயது முதலே மகாவீர் போகத்திடம் மல்யுத்த பயிற்சி பெற்றவர். இதே கிராமத்தை சேர்ந்தவர் தான் வினேஷ் போகத். அண்மையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிக்கு முன்னேறிய நிலையில் தகுதி நீக்கம் செய்யாட்டார்.

“எங்கள் கிராமத்தில் யாரும் எட்ட முடியாத இடத்தை எட்டி இருந்தார் வினேஷ் போகத். எங்களை பொறுத்தவரையில் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் அவருக்குதான். அதைத்தான் நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன்” என யு-17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கு முன்னதாக நேஹா சொல்லி இருந்தார்.

இதே தொடரில் மகளிருக்கான 43 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் அதிதி குமாரி, மகளிருக்கான 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் புல்கித் மற்றும் மகளிருக்கான 73 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மான்சி லதர் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். இதன் மூலம் ஒரே நாளில் நான்கு தங்கம் வென்றுள்ளது இந்தியா. முன்னதாக, ஆடவர் பிரிவில் 110 கிலோ எடை கிரகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் ரோனக் தஹியா வெண்கலம் வென்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE