ஐசிசி-யின் அடுத்த தலைவராக ஜெய் ஷாவுக்கு வாய்ப்பு!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசியின் தற்போதைய தலைவராக இருக்கும் கிரேக் பார்க்லேவின் பதவிக் காலம் வரும் நவம்பருடன் முடிகிறது. ஏற்கெனவே 2 முறை பொறுப்பு வகித்த அவர் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இதனையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்கலாம் என்று ஐசிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஐசிசியின் புதிய தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஐசிசி விதிகளின்படி, தலைவர் தேர்தலுக்கு 16 வாக்குகள் தேவை. தற்போது இந்த 16 வாக்குகளும் ஜெய் ஷாவுக்கு உறுதியாகி இருப்பதாக தெரிகிறது.

ஒரு வேளை ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டால் இளம் வயதிலேயே ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். அவருக்கு தற்போது வயது 35. ஏற்கெனவே இந்தியாவில் இருந்து ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன், சுஷாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசி தலைவராக பதவி வகித்துள்ள நிலையில், ஜெய் ஷா இந்தியாவைச் சேர்ந்த ஐந்தாவது தலைவராக இருப்பார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE