புதுடெல்லி: மாடர்ன் டே கிரிக்கெட்டில் உயர்மட்ட அளவில் விளையாடுவதற்கு ஹைபிரிட் பிட்ச்கள் (ஆடுகளம்) அவசியம் என முன்னாள் இங்கிலாந்து வீரர் பால் டெய்லர் தெரிவித்துள்ளார். இந்த வகை பிட்ச்களை இந்தியாவில் கொண்டு வருவதன் அவசியம் குறித்து அவர் பேசியுள்ளார்.
கடந்த மே மாதம் இமாச்சல் பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இந்தியாவின் முதல் ஹைபிரிட் பிட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. ‘இந்த வகை ஹைபிரிட் பிட்ச் இந்திய கிரிக்கெட்டில் ரெவல்யூஷனை ஏற்படுத்தும்’ என அப்போது ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமால் தெரிவித்திருந்தார்.
“மாடர்ன் டே கிரிக்கெட்டில் உயர்மட்ட அளவில் விளையாடுவதற்கு ஹைபிரிட் பிட்ச்கள் அவசியம். இதில் விளையாடுவதன் மூலம் இந்திய வீரர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாடும் போது பெரிய அளவில் பலன் தரும். ஏனெனில், இந்த வகை ஹைபிரிட் ஆடுகளங்கள் உலகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ளன. அந்த வகையில் கிரிக்கெட் சார்ந்து இந்தியாவில் இருக்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும். இதனை இந்தியா முழுவதும் பரவலாக கொண்டு வர விரும்புகிறோம்” என பால் டெய்லர் தெரிவித்தார்.
ஹைபிரிட் பிட்ச்கள் இங்கிலாந்தின் ஓவல் மற்றும் லார்ட்ஸ் மைதானங்களில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் மைதானங்களிலும் இந்த வகை பிட்ச்கள் நிறுவப்பட்டுள்ளன.