“மனு பாகர் திருமணம் பற்றி இப்போது யோசிக்கவே இல்லை” - வதந்திக்கு தந்தை முற்றுப்புள்ளி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “திருமணத்தை பற்றி நாங்கள் இப்போது யோசிக்கக்கூட இல்லை” என்று கூறி மனு பாகர் - நீரஜ் சோப்ரா திருமண வதந்திகளுக்கு மனு பாகரின் தந்தை முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்று அசத்தியவர் மனு பாகர். அதேபோல், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. பாரிஸ் ஒலிம்பிக்குக்கு பிறகு இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் வீடியோ வெளியானது. அதேபோல், மனு பாகரின் தாயுடன் நீரஜ் சோப்ரா ஜாலியாக பேசும் வீடியோ காட்சிகளும் வெளியாகின.

இந்த இரண்டு வீடியோக்களை வைத்து மனு பாகரும், நீரஜ் சோப்ராவும் திருமணம் செய்யப்போவதாக வதந்திகள் வெளியாகின. இந்த வதந்திகளுக்கு தற்போது மனு பாகரின் தந்தை முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக மனு பாகரின் தந்தை கிஷன் பாகர் பேசுகையில், “எனது மனைவி (மனு பாகரின் தாய்) நீரஜ் சோப்ராவை தனது மகன் போன்று கருதுகிறார். மேலும் மனு பாகருக்கு வயது குறைவு தான். திருமணம் செய்யும் வயதை அவர் இன்னும் அடையவில்லை. திருமணத்தை பற்றி நாங்கள் இப்போது யோசிக்கக்கூட இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE