வினேஷ் போகத் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற எடை பரிசோதனையில் அவர், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. இந்நிலையில் தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார்.

அதில், வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நடுவர் மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்துவினேஷ் போகத் தரப்பில் வாதாடுவதற்காக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான ஹரிஷ் சால்வே மற்றும் விதுஷ்பத் சிங்கானியா ஆகியோரை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.

வினேஷ் போகத் மனு மீதான விசாரணையை சுமார் 3 மணி நேரம் நடத்திய நடுவர் டாக்டர் அன்னபெல் பென்னட் நேற்று இரவு தனது முடிவை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த தீர்ப்பை கோடிக்கணக்கானோர் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு இன்று (ஆக.11) தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE