பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிர் 76 கிலோ எடைப்பிரிவில் ரெபிசாஜ் வாய்ப்பை இழந்தார் இந்தியாவின் ரீதிகா ஹுடா. அரையிறுதியில் கிர்கிஸ்தானின் ஐபெரி மெடெட் கைசியை அமெரிக்க வீராங்கனை கென்னடி பிளேட்ஸ் வீழ்த்தினார்.
இதன் மூலம் வெண்கலப் பதக்க போட்டியில் ரீதிகா ஹுடா விளையாடும் வாய்ப்பை இழந்தார். காலிறுதியில் ஐபெரி மெடெட் கைசியுடன் ரீதிகா ஹுடா விளையாடி இருந்தார். இதில் 1-1 என இருவரும் புள்ளிகள் பெற்றனர். செயல்திறன் சார்ந்த காரணங்களுக்காக ஐபெரி அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார். அவர் இறுதிக்கு முன்னேறினால் ரெபிசாஜ் சுற்றில் ரீதிகா விளையாடும் வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் அதில் தோல்வி கண்டார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் வென்றுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் கடைசி போட்டியாளரான ரீதிகா ஹுடாவின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க கணக்கும் ஆறு என்ற எண்ணிக்கையில் நிறைவாகி உள்ளது.
மகளிர் தனிபர் கோஃல்ப் விளையாட்டில் இந்தியாவின் அதிதி அசோக் 29-வது இடத்தையும், தீக்ஷா தார் 40-வது இடத்தையும் எட்டினர். முன்னதாக, ஆடவர் மல்யுத்தத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தி இருந்தார்.