பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ரெய் ஹிகுச்சியிடம் இந்திய வீரர் அமன் ஷெராவத் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து வெண்கல பதக்கத்துக்கான ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறுகிறது.
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் அமன், வடக்கு மாசிடோனியா வீரர் செஹ்ராவத் விளாடிமிர் எகோரோவை எதிர்கொண்டார். 10-0 என்ற கணக்கில் விளாடிமிர் எகோராவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் அமன்.
இதையடுத்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் ஜெலிம்கான் அபகரோவை, இந்திய வீரர் அமன் எதிர்கொண்டார். 12-0 என்ற புள்ளிகள் பெற்று ரஷ்ய வீரரை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் ரெய் ஹிகுச்சியுடன் மோதினார் இந்திய வீரர் அமன். தொடக்கத்திலிருந்தே ஜப்பான் வீரர் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அவருக்கு ஈடு கொடுத்து இந்திய வீரர் அமன் போராட, இறுதியில் 0-10 என்ற கணக்கில் ஜப்பானின் ரெய் ஹிகுச்சியிடம் தோல்வியைத் தழுவினார் அமன். எனினும் 3-ம் இடத்துக்கான வெண்கலப் போட்டி வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணி அளவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.