“5 தசாப்தங்களுக்குப் பிறகு...” - ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

புது டெல்லி: ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு இதயபூர்வமான வாழ்த்துகள். 5 தசாப்தங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகள். அணியின் நிலைத்தன்மையும், திறமையும், ஒற்றுமையும், போராடும் குணமும் நமது இளைஞர்களை ஊக்குவிக்கும்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “தலைமுறைகள் போற்றும் சாதனை இது. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பிரகாசமாக ஜொலித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. ஒலிம்பிக்கில் தொடர்ச்சியான இரண்டாவது பதக்கம் என்பதால் இது மிகவும் ஸ்பெஷலானது. திறமை, விடாமுயற்சி மற்றும் குழுவின் உழைப்பால் சாத்தியமான வெற்றி இது. சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் ஹாக்கியுடன் எமோஷனலான தொடர்பை கொண்டுள்ளனர். இந்த சாதனை நம் நாட்டு இளைஞர்களிடையே ஹாக்கியை மேலும் பிரபலமாக்கும்” என தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “என்ன ஓர் அற்புதமான ஆட்டம். ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நமது ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். உங்களின் ஆற்றல் நிரம்பிய செயல்திறன் மற்றும் குறை சொல்ல முடியாத விளையாட்டுத் திறன் ஆகியவை விளையாட்டின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. உங்கள் சாதனை நாட்டை பெருமைப்படுத்தியுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது பெருமை அளிக்கிறது. நன்றி ஸ்ரீஜேஷ்... உங்களின் இடைவிடாத உன்னதமான அர்ப்பணிப்பு எங்களை ஊக்கப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

52 ஆண்டுகளுக்குப் பிறகு... - முன்னதாக, வியாழக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றது. 1972-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இதுவரை பாரிஸ் ஒலிம்பிக்கில் மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது கவனிக்கத்தக்கது.

இந்திய வீராங்கனை மனு பாகர் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவு மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி என இரண்டிலும் வெண்கலம் வென்றார். அவரைத் தொடர்ந்து ஆடவர் 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே (Swapnil Kusale) வெண்கலப் பதக்கம் வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE