நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே இறுதிக்கு தகுதி பெற்று அசத்தல் | பாரிஸ் ஒலிம்பிக்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் தூரம் வீசி இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருந்த ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச் சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைப்பெறும் ஈட்டி எறிதல் போட்டியில் மொத்தம் 32 பேர் பங்கேற்றனர். முதல் கட்டமாக நடைபெறும் தகுதி சுற்றில் ஏ மற்றும் பி என இரண்டு குழுக்காளாக வீரர்கள் பங்கேற்றனர். இந்தச் சுற்றில் தகுதி பெற வேண்டும் எனில் ஒரு வீரர் 84 மீட்டர் தூரம் ஈட்டி எறிய வேண்டும்.

ஒவ்வொரு வீரருக்கும் 6 வாய்ப்புகள் உண்டு. அதில் எது சிறந்த தூரமோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில் பி பிரிவில் உள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தான் முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் ஈட்டியை எறிந்து அசத்தினார். இதன் மூலம் அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த சீசனின் மிகச் சிறந்த தூரம் இது என குறிப்பிடப்படுகிறது.

ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, குருப் ஏ பிரிவில் இடம் பெற்ற சக இந்திய வீரர் கிஷோர் ஜெனா, 80.73 மீ தூரம் ஈட்டி எறிந்தார். இதனால் அவர் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டார்.

நீரஜ் சோப்ரா: 2020-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். இவர் எறிந்த ஈட்டின் தூரம் 87.58 மீட்டர் என்பதாகும். அந்த வகையில் இந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு இந்தியர்களிடையே எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE