“இந்திய ஹாக்கி அணி வெற்றியை பார்த்து கண்ணீரை அடக்க முடியவில்லை” - தன்ராஜ் பிள்ளை உருக்கம்

By ஆர்.முத்துக்குமார்

இந்தியாவின் முன்னாள் டாப் நட்சத்திர ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை கிரேட் பிரிட்டனுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி குறித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அதோடு ஸ்ரீஜேஷின் தடுப்புகளைப் பார்த்து ஆனந்த கண்ணீர் பெருகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிடிஐ-யிடம் தன்ராஜ் பிள்ளை கூறியதாவது: "என்னால் பெருகிய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பல ஆண்டுகளாக இது போன்ற ஒரு ஹாக்கி ஆட்டத்தை இந்திய அணியிடமிருந்து நான் பார்க்கவில்லை. இப்போது எனக்கு நம்பிக்கைப் பிறந்துள்ளது. 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இந்திய அணி தங்கப்பதக்கத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும்.

வெற்றி பெற்றவுடன் என் கண்களிலிருந்து தாரை தாரையாக பெருகிய கண்ணீரை அடக்க முடியவில்லை. 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு இத்தகைய ஒரு ஆட்டத்தை நான் பார்க்கிறேன். ஸ்ரீஜேஷ் கோல் போஸ்ட்டுக்கு முன்னால் பெரும்சுவராக நின்றார். அவர் செய்த எண்ணற்ற சேவ்கள் அதிசயங்கள் அன்றி வேறில்லை.

எனக்கு மெய் சிலிர்த்துப் போனது. பெனால்டி ஷூட் அவுட்டில் 4வது கோலை இந்தியா அடித்தவுடன் உற்சாகத்தில் பெரிதாக கத்தியே விட்டேன். என் சப்தம் கேட்டு அண்டை வீட்டார்கள் வரப்போகிறார்கள் என்றார்கள். ஆனால் என்னால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு போட்டியையும் பார்த்து மகிழ்ந்தேன். ஒரு நிமிடம் கூட இருந்த இடத்திலிருந்து நகரவில்லை. எனக்கு இந்திய அணியின் இந்த ஆட்டத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ஒரு காலிறுதி ஆட்டத்தில் 10 வீரர்களுடன் 44 நிமிடங்கள் ஆடியதெல்லாம் சாதாரண காரியமல்ல.

நாம் தற்காப்புடன் ஆடினோம். ஆனால் அது அவசியம்தான். ஸ்ரீஜேஷ் ஆடியதும் பெனால்டி ஷூட் அவுட்டில் கோல்களை அடித்ததையும் பார்த்து எனக்கு வார்த்தைகளே வரவில்லை. கண்ணீர் தானாகவே என் கண்களிலிருந்து வெளிப்பட்டது.

அரையிறுதியில் இந்திய அணியினர் இதே தீவிரத்துடன் ஆட வேண்டும். தங்களுக்குத் தாங்களே பிரஷர் போட்டுக் கொள்ளக் கூடாது. நிச்சயம் இந்த அணி தங்கம் வெல்ல முடியும். ஒலிம்பிக் சாம்பியனாகும் தகுதி தரநிலைகள் அனைத்தும் இந்த இந்திய அணியிடம் இருக்கிறது. பயிற்சியாளர்கள் கிரெய்க் ஃபுல்டன், ஷிவேந்திரா சிங் அருமையாக தங்கள் பணிகளைச் செய்கின்றனர். நிறைய அறிவுரைகளை வழங்குவதைப் பார்க்கிறேன்.

இந்திய ஹாக்கி அணி பல கிரேட் பிளேயர்களை உருவாக்கியுள்ளது. ஆனால் ஸ்ரீஜேஷை நான் லெஜண்ட் என்றுதான் கூறுவேன். இவரைப்போன்ற ஒரு வீரர் தலைமுறைக்கு ஒருமுறைதான் உருவாகிறார்கள்." என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE