பாரிஸ்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய கலப்பு ஸ்கீட் அணி வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தப் பிரிவில் இந்தியாவின் மகேஸ்வரி சவுகான் மற்றும் அனந்த்ஜித் சிங் ஜோடி தகுதி சுற்றில் நான்காவது இடம் பிடித்து அசத்தினர். இன்று (திங்கள்கிழமை) மாலை 6.30-க்கு நடைபெறும் வெண்கல பதக்க போட்டியில் இந்திய அணி, சீனாவுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளும் தகுதி சுற்றில் 146 புள்ளிகளை பெற்றன. இருந்தும் சீனா மூன்றாவது இடம் பிடித்தது.
தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இத்தாலி மற்றும் அமெரிக்க அணிகள் விளையாடுகின்றன. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை வென்றுள்ள மூன்று பதக்கமும் துப்பாக்கி சுடுதலில் இருந்தே கிடைத்துள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் மனு மற்றும் சரப்ஜோத் சிங் மற்றும் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் ஸ்வப்னில் ஆகியோர் இந்தியாவுக்காக வெண்கலம் வென்றனர்.