கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இலங்கை அணி 32 ரன்களில் வெற்றி பெற்றது.
மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது.
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். கில் 34 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஷிவம் துபே, கோலி, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஆட்டமிழந்தனர். அக்சர் படேல், 44 ரன்களில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சிராஜ், அர்ஷ்தீப் ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 42.2 ஓவர்களில் முடிவில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது. தொடரின் அடுத்தப் போட்டி வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது. அதில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும். இதில் இலங்கை லெக் ஸபின்னர் ஜெஃப்ரி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.